மத்திய அரசு மற்றும் அதன் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் முறைசாரா தொழில்களை அழித்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது தெரிவித்துள்ளார்.
இன்று வீடியோ ஒன்றினை பகிர்ந்த ராகுல் காந்தி, அதில் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள முறைசாரா தொழிலாளர்களை மத்திய அரசு அழித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதனை சரிசெய்ய காங்கிரஸ் தனது 2019 தேர்தல் அறிக்கையில் முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச ஊதிய சமூக நலத் திட்டத்தை - "NYAY போன்ற திட்டத்தை" அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, மத்திய அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஏதுமின்றி திடீரென அறிவித்த முழுமுடக்கமானது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பெரிதளவில் பாதித்தது என்றும், அவர்களுடைய வாழ்வாதாரத்தினை முற்றிலுமாக முடக்கிவிட்டது என்றும் கூறியுள்ளார். மேலும், முடக்கப்பட்ட நடுத்தர மற்றும் முறைசாரா தொழில்கள் என்பது அதை சார்ந்து இருப்பவர்களின் வாழ்வாதாரத்தினை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அதற்கான தரவுகளை பகிரிந்து ராகுல் காந்தில் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே இருந்த பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியுடன் கொரோனா ஊரடங்கும் பொருளாதாரத்தினை பெரிதளவுக்கு தாக்கியுள்ளது என்றும், பொது முடக்க காலக்கட்டத்தில் 97 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும், எளிய மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்கவும் மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அரசு நிவாரணத்தினை வழங்க வேண்டும் என்றும், அதே போல பொருளாதார மீட்பு குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ள சில கருத்துக்களையும் மேற்கோள்காட்டியும் ராகுல் காந்தி மத்திய அரசினை விமர்சித்திருந்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களின் வளர்ச்சிக்காக அரசு கவனம் செலுத்தாமல் பெரும் பணக்காரர்களுக்கு வரி தள்ளுபடியை அரசு மேற்கொண்டிருப்பதையும் ராகுல் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸின் தொடர்ச்சியான இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகின்றது. முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார வீழ்ச்சியை கொரோனா தொற்றுடன் இணைத்து கடவுளின் செயல் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.