கொரோனா தொற்று சர்வதேச அளவில் எதிர்பார்க்க முடியாத பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் பிரதமர் மோடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் தேசம் முழுவதும் முழு முடக்க நடவடிக்கையை அறிவித்திருந்தார். இதன் காரணமாக அத்திவசமில்லாத அனைத்து தனியார் நிறுவனங்களும், பொது மற்றும் தனியார் போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
திட்டமிடப்படாத இந்த நடவடிக்கையின் காரணமாகப் பல லட்சக்கணக்கான இடம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை முற்றிலுமாக இழந்துள்ளனர். மேலும், வட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குப் பல நூறு மைல்கள் நடந்தே செல்ல தொடங்கியிருந்தனர்.
இந்த சூழலில் டெல்லியில் டெலிவரி முகவராக பணிபுரிந்து வந்த தொழிலாளி ரண்வீர் சிங், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது கிராமத்திற்கு டெல்லியிருந்து நடந்தே கடக்க தொடங்கியுள்ளார். கிராமத்திற்கு 80 கி.மீ உள்ள நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
ரன்வீர் சிங் டெல்லியிலிருந்து 326 கி.மீ தூரத்தில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்கு நடக்கத் தொடங்கியிருந்தார்.
உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நெடுஞ்சாலையில் தடுமாறி கீழே விழுந்தபோது உள்ளூர் கடைக்காரர் ஒருவர் அவருக்கு தேநீரும் பிஸ்கட்டும் வழங்கியுள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே தொழிலாளி ரண்வீர் சிங் மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்.
இடம் பெயர் தொழிலாளி ரண்வீர் சிங்கை போலப் பல ஆயிரக்கணக்கில் இடம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் தலைநகர் டெல்லியிலிருந்து பல மாநிலங்களுக்கு நடைப்பயணமாகவே செல்ல தொடங்கியிருந்தனர். ஏற்கெனவே பொது மற்றும் தனியார் போக்குவரத்துகள் முற்றிலுமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உ.பி அரசு 1000 பேருந்துகளையும், டெல்லி அரசு 200 பேருந்துகளையும் ஏற்பாடு செய்திருந்தன.
சர்வதேச அளவில் கொரோனா தொற்று பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் 21 நாட்கள் முழு முடக்க நடவடிக்கையினை பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்பானது முன் ஏற்பாடுகள் இல்லாத அறிவிப்பு எனப் பலர் விமர்சித்திருக்கின்றனர். இப்படியான சூழலில்தான் பல்லாயிரக்கணக்கான இடம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமத்திற்குச் செல்வதற்குத் தவித்து வருகின்றனர்.