Coronavirus Outbreak: தற்போது உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இத்தாலிதான்.
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் 390-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது
- சீனாவில் கொரோனா பாதிப்பு பெரும்பான்மையாக குறைந்துள்ளது
- சீனாவின் ஹூபே மாகாணத்தில் இந்த நோய் தொற்று உருவானது
London: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிது மட்டும் போதாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின், மருத்துவ வல்லுநர், மைக் ரையன், பிபிசியிடம் பேசியபோது, “தற்போது நாம் செய்ய வேண்டியது, யாருக்கெல்லாம் கொரோனா இருக்கிறதோ அவர்களையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும்.
இப்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவில் மிகப் பெரும் ஆபத்து இருக்கிறது… முறையான சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால், ஊரடங்கு எப்போது தளர்த்தப்படுகிறதோ, அப்போது, மீண்டும் கொரோனா பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்,” என எச்சரிக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் சீனா, ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, மக்கள் நடமாட்டத்துக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது சீனாவில் கொரோனா பரவல் பெரும்பான்மையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க உள்ளிட்டவையும் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளன.
பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள், மதுபானக் கூடங்கள், உணவகங்களை மூடப்பட்டுள்ளன.
சீனா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவில்தான் ஆரம்பக்கட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. அங்கு ஊரடங்கு உத்தரவோடு, கடுமையான பரிசோதனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டதனால்தான் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனச் சொல்கிறார் மைக் ரையன்.
“நாம் வைரஸ் பரவலைத் தடுத்த அடுத்தகட்ட நடவடிக்கை, வைரஸை அடியோடு அழிப்பதாகத்தான் இருக்க வேண்டும்,” என்கிறார் ரையன்.
தற்போது உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இத்தாலிதான். இங்கிலாந்திலும், மக்கள் ‘விலகி இருத்தலை' முறையாக பின்பற்றவில்லை என்றால், சுகாதார நெருக்கடி ஏற்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனாவுக்கான மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பது குறித்து ரையனிடம் கேட்டபோது, “பல தளங்களில் கொரோனாவுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பது நடந்து வருகிறது. அமெரிக்காவில் தற்போது அதற்கான முன்னோட்டம் ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில் நடைமுறையில் எது சாத்தியம் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கண்டுபிடிக்கப்படும் மருந்து முற்றிலும் பாதுகாப்பானது என்பது திட்டவட்டமாக தெரிய வேண்டும். இன்னும் அதற்கு ஓராண்டாவது ஆகலாம். மருந்துகள் வரலாம். ஆனால், நாம் செய்ய வேண்டிய காரியங்களை செய்யத் தொடங்க வேண்டும்,” என வலியுறுத்துகிறார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)