மக்களவை தேர்தல் தோல்விக்கான மிக முக்கிய 2 காரணங்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டது.
முன்னதாக காங்கிரசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அவை ஏதும் பலன் அளிக்கவில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிட்டன. இதில் ஒரு இடத்தில் கூட இந்த இரு கட்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
தலைநகர் தொகுதிகளை கைப்பற்றி பாஜக அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையயில் தேர்தல் தோல்விக்கான முக்கிய காரணங்கள் குறித்து ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எதிர்பார்த்த அளவுக்கு மக்களவை தேர்தல் முடிவுகள் நமக்கு சாதகமாக அமையவில்லை. தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட முடிவில் 2 முக்கிய காரணங்களை கண்டுபிடித்தோம். ஒன்று என்னவென்றால் பெரும்பான்மையான பகுதியில் காணப்பட்ட பாஜகவுக்கான ஆதரவு டெல்லியிலும் காணப்பட்டது. இன்னொன்று மக்கள் இந்ததேர்தலை மிகப்பெரும் தேர்தலாக கருதினர். அவர்கள் மோடிக்கும் - ராகுலுக்கும் இடையிலான போட்டியாக எண்ணிக் கொண்டனர். இந்த இரண்டுதான் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி டெல்லியில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் 40 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. இதில் பஞ்சாபில் ஒரு தொகுதியில் மட்டுமே ஆம் ஆத்மி வெறி பெற்றது குறிப்பிடத்தக்கது.