கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர், கீழே விழுந்து காயமடைந்தார். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மருத்துவனையில் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, சசி தரூர்க்கு கைகொடுத்த நிர்மலா சீதாராமன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, சசி தரூரை சந்திப்பது குறித்து எனது கட்சி உட்பட யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
சசி தரூர் பிரார்த்தனையின் போது, கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என்பது குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. அந்த சமயத்தில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த நான், அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து, நலம் பெற வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதுகுறித்து எனது கட்சி உட்பட யாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று நிர்மலா கூறியுள்ளார்.
இதுகுறித்து சசி தரூர் தனது டிவிட்டர் பதிவில், 'இந்திய அரசியலில் இந்த பண்பு மிக அரிது. அதற்கு நல்ல உதாரணமாக இவரைப் பார்கிறேன் என்று பாஜக தலைவர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் உடல் நலம் விசாரித்தது தொடர்பான புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
ரஃபேல் ஊழல் வழக்கு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்து வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் ஒருவரை அவர் நேரில் சென்று புன்னகையுடன் நலம் விசாரித்தது அவருக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருவனந்தபுரம் தொகுதி மக்களவை வேட்பாளரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சசி தரூர், நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் தனது எடைக்கு எடை பழங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி துலாபாரம் செலுத்த வந்திருந்தார். அப்போது, துலாபாரம் தராசின் ஒரு பக்கத்தில் பழங்கள் அடுக்கி வைக்கப்பட, மற்றொரு தட்டில் சசி தரூர் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தராசு முள்ளில் மேல்பகுதியில் இருந்த கனமான இரும்பு கொக்கி சசி தரூர் தலையின் மீது வேகமாக விழுந்தது.
எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நிலைகுலைந்த சசி தரூர் தடுமாறியவாறு கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 6 தையல் வரை போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் தனது தேர்தல் பரப்புரையை தொடர்ந்துள்ளார்.