டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று வேறு பொது சின்னத்தை ஒதுக்குமாறு கூறியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.
மக்களவை தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தினகரன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. டிடிவி.தினகரன் சார்பில் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி தனது வாதத்தை முன் வைத்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் குக்கர் சின்னம் வழக்கு விசாரிக்கப்பட்டது.
அப்போது சுயேச்சைகளுக்கு ஒதுக்குவது போல பொது சின்னங்களில் ஒன்றை டிடிவி கட்சிக்கு ஒதுக்குங்கள் என தலைமை நீதிபதி யோசனை தெரிவித்தார். மேலும், 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 19 இடைத்தேர்தலுக்கும் ஒரே சின்னத்தை அவரது அணிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.