வாக்குப்பதிவின்போது வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் வேலூரை தவிர்த்து மற்ற 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், வன்முறை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியுள்ளார்.