மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று மாலை பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் வன்முறை வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 'கோபேக் அமித்ஷா' என மாணவர்கள் பதாகை எந்தி நின்றதே இந்த வன்முறைக்கு காரணம் என கூறப்படுகிறது. இது ஜனநாயகத்தை ஒட்டத்தை தடுக்கும் முயற்சி என அமித்ஷா கூறியுள்ளார். பாஜகவினர் மேற்குவங்கத்திற்கு வெளியில் இருந்து அழைத்து வந்த குண்டர்களால் இந்த வன்முறை சம்பவம் தூண்டப்பட்டுள்ளது என்று மம்தா கூறியுள்ளார்.
அமித்ஷா பங்கேற்ற பேரணி நேற்று மாலை 4.30-க்கு மத்திய கொல்கத்தாவின் எஸ்ப்ளனேட் பகுதியில் தொடங்கியது. வன்முறை நடந்த இடங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் காவி உடை அணிந்த சில கற்களை வீசுவது போல் உள்ளது.
நேற்று மாலை, கொல்கத்தா பல்கலைக்கழகம் வாயிலில் இந்த வன்முறை நிகழ தொடங்கியுள்ளது. அந்த பல்கலைக்கழக மாணவர்கள் பாஜகவிற்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து, பாஜக ஆதரவாளர்கள் இரும்பு கம்பிகள் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்துள்ளனர்.
அமித்ஷா சென்ற வாகனம் கல்லூரி சாலையை 1 கி.மீ கடந்து செல்வதற்கு முன்பாகவே, பாஜக ஆதரவாளர்கள் 'கோபேக் அமித்ஷா' பதாகைகள் எந்தி நின்றுக் கொண்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தை நேற்று மாலை மம்தா பார்வையிட்டார்.
கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் தடியடி நடத்தினர். தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, நரசிம்ம ராவ் உள்ளிட்டோர் இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று மாலை சந்திக்க உள்ளனர்.
அமித்ஷா என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்? அவர் தான் எல்லாரையும் விட பெரியவர் என்று நினைக்கிறாரா? அவர் என்ன கடவுளா? அவருக்கு எதிராக யாரும் போராடாமல் இருப்பதற்கு? என மம்தா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். வெளியில் இருந்து வந்த பாஜக குண்டர்கள் கல்லூரியில் இருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளனர். மேற்குவங்கம் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் இன்று செய்ததை மேற்குவங்கம் ஒரு போதும் மறக்காது என்று அவர் கூறியுள்ளார்.
மேற்குவங்கம் மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களை ஒருகை பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அமித்ஷா கூறியுள்ளார்.