This Article is From Apr 02, 2019

தென் மாநிலங்களை பாஜக ஒருபோதும் கவனிக்காமல் விட்டதில்லை: அமித்ஷா பேச்சு

தென் மாநிலங்களை பாஜக ஒருபோதும் கவனிக்காமல் விட்டதில்லை என பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

தென் மாநிலங்களை பாஜக ஒருபோதும் கவனிக்காமல் விட்டதில்லை: அமித்ஷா பேச்சு

தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது, பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனை நினைத்து இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறேன். பாகிஸ்தான் பிடியில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்ட அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர். புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கவே பாகிஸ்தானுள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியில் மீண்டும் ஏழை மக்களுக்கான ஆட்சி அமைப்போம். மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். தமிழகத்திற்கு அதிக நிதியை பாஜக அரசு ஒதுக்கியுள்ளது.

தென் மாநிலங்களை பாஜக ஒருபோதும் கவனிக்காமல் விட்டதில்லை. ஆனால் தமிழகத்திற்கு காங்கிரஸ் போதிய நிதியை ஒதுக்கவில்லை. பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு மேலும் அதிக நிதி ஒதுக்கப்படும். பாஜக - அதிமுக கூட்டணி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களை தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் கடந்த 5 ஆண்டுகளை போல வரும் 5 ஆண்டுகளிலும் ஏழைகளுக்கான ஆட்சியாக மோடி அரசு இருக்கும். காஷ்மீர் பிரச்சினையில் எந்தவித சமரசமும் இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரை அமைச்சர்களாக்கியது பாஜக. தமிழிசை சவுந்தரராஜனுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்று அவர் கூறினார்.

.