மக்களவை தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு மட்டுமே முடிந்துள்ள நிலையில் பாஜக 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி விட்டதாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 7-வது கட்டமாக வரும் 19-ம்தேதி 56 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது-
பாஜக எத்தனை இடங்களை கைப்பற்றும் என்று ஊடகங்கள் தொடர்ந்து என்னிடம் கேட்டு வருகின்றன. நான் நாடு முழுவதும் பயணம் செய்து விட்டேன். பாஜகவுக்கு இருக்கும் வரவேற்பை நேரில் பார்த்து அறிந்து கொண்டேன். 6-ம் கட்ட வாக்குப்பதிவு முடிவிலேயே மெஜாரிட்டியை தாண்டி பாஜக 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி விட்டது.
இவ்வாறு அமித் ஷா கூறினார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக 282 தொகுதிகளை தனிப்பெரும்பான்மையாக கைப்பற்றியது. காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தியாவில் ஒரு கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு 10 சதவீத (55) இடங்களை கைப்பற்ற வேண்டும். நாட்டில் மொத்தம் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன.