தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (ஏப்.18ம்) தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இதேபோல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன.
இதுதவிர அதிமுகவில் இருந்து பரிந்து வந்த அமமுக இந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதேபோல், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இந்த தேர்தலை எதிர்கொள்கிறது.
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆட்சி அமைவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில், இரு பெரும் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸூம் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கோவை, தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார். திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சேலம், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
தமிழகத்தில் வருகிற 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு பிரசாரம் முடிவடையும். அதன்படி, தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
தொடர்ந்து, வரும் 18 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை கண்காணிக்க தலைமைச்செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து 30 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாளை காலையில் இருந்து வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்குசாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
கடைசி நாட்களில்தான் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படும் என்பதால், இதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.