தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதியிலும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நாள்நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல்ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதற்காக டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷீல் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க வேண்டும். சூலூர் தொகுதி எம்எல்ஏ மரணத்தால் காலியானதால், அங்கும் தேர்தல் நடத்த தடையில்லை. இதனால் 4 தொகுதிகளில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. இதனையடுத்து நாளை காவல்துறை உயரதிகாரிகள், டிஜிபிக்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் தேர்தல் ஆணையர்கள், அதன் பின்னர் தமிழக அரசின் முதன்மை செயலாளர், வருமானவரித்துறை உயரதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
மேலும் படிக்க: ‘ரபேல் ஊழல்' புத்தக வெளியீட்டிற்குத் தடை..!- தேர்தல் ஆணைய நடவடிக்கையின் பின்னணி என்ன #Exclusive