உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளது.
New Delhi: தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் தேதியை மாற்றக்கோரிய வழக்கு விசாரணையில், வாக்குப்பதிவு செய்ய எவ்வளவு நேரமாகும்? புனித நாட்களில் ஏன் வாக்களர்கள் வாக்களிக்க முடியாதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.
நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஏப்ரல் 18-ம் தேதி புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுவதால் தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்துவ மக்கள் களம் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பெரிய வியாழன் பண்டிகையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
மேலும், வாக்குப்பதிவு செய்ய எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? எப்படி வாக்களிப்பது, எப்படி வணங்குவது என்பை எல்லாம் சொல்லி அறிவுரை வழங்க முடியாது என்றும் காட்டமாக கூறியது.