This Article is From Apr 20, 2019

'விளம்பரத்திற்காக மட்டுமே திட்டங்களை அறிவிக்கிறது பாஜக ': பிரியங்கா காந்தி கடும் தாக்கு!!

உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

'விளம்பரத்திற்காக மட்டுமே திட்டங்களை அறிவிக்கிறது பாஜக ': பிரியங்கா காந்தி கடும் தாக்கு!!

ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரளாவிலும் பிரியங்கா பிரசாரம் செய்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • உத்தர பிரதேசத்தில் 40 தொகுதிகளுக்கு பிரியங்கா காந்தி பொறுப்பாளர்
  • மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
  • ராகுலுக்கு ஆதரவாக கேரளாவிலும் பிரசாரம் செய்கிறார் பிரியங்கா
Kanpur:

வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே பாஜக திட்டங்களை அறிவிப்பதாகவும், நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குப் பார்வை அக்கட்சியிடம் இல்லை என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். 
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போதுஅவர் பேசியதாவது-

இந்திரா காந்தியுடன் ஒப்பிடும்போது நானெல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனால் நாட்டுக்காக சேவை செய்வது என்கிற அடிப்படையில் நானும், எனது சகோதரர் ராகுல் காந்தியும் இந்திராவைப் போன்று கடினமாக உழைப்போம். எங்களை  தேர்வு செய்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். 

சொந்த நலனுக்காக மட்டுமே பாஜக உழைக்கிறது. நாட்டின் நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லை. விளம்பரத்துக்காக மட்டுமே பாஜக அனைத்தையும் செய்கிறது. ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டம் என்பது ராணுவ வீரர்களின் உரிமை. அதை மத்திய அரசின் நலத்திட்டம் என்று சொல்ல முடியாது. 

கான்பூரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப் போகிறோம் என்று பாஜக கூறுகிறது. ஆனால் இங்கு எதுவும் ஏற்படவில்லை. வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது போன்றவற்றைதான் இங்கு பார்க்க முடிகிறது. 

ஏழ்மையை ஒழிப்பதற்காக ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இதனை வழங்க தங்களிடம் பணம் இல்லை என்று பாஜக கூறுகிறது. ஆனால் அவர்கள் தொழிலதிபர்களுக்கு அளிப்பதற்கு போதிய பணம் வைத்துள்ளனர். 

பாஜக கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி.யும் மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. ராகுலின் பெற்றோர், பாட்டியை பாஜக தினமும் விசமர்சிக்கிறது. ஆனால் அவற்றை புன்னகையுடன் ராகுல் எதிர் கொள்கிறார். 

இவ்வாறு பிரியங்கா பேசினார். உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 
 

.