This Article is From Apr 04, 2019

வயநாடு தொகுதி பொறுப்பாளராக கே.வி.தங்கபாலு நியமனம்!

கேரளா மாநிலத்தில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

வயநாடு தொகுதி பொறுப்பாளராக கே.வி.தங்கபாலு நியமனம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதையடுத்து கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இதற்காக நேற்று இரவே கேரளா வந்த அவர் இன்று காலை தனி ஹெலிகாப்டரில் வயநாடு வந்தார். ராகுல் காந்தியுடன், அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா வதேரா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் வந்திருந்தனர்.

ராகுலையும், பிரியங்காவையும் காண இன்று காலை முதலே வயநாட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்சி பாகுபாடின்றி ஏராளமான மக்கள், பெண்கள், குழந்தைகள் திரண்டனர். வேட்புமனு தாக்கலை தொடர்ந்து நடந்த பேரணியில் அவர்கள் இவருவரையும் மக்கள் உற்சாகமாக கை அசைத்து வரவேற்றனர். 

வயநாட்டின் அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் கொடிகளும், அவற்றை ஏந்திச்சென்ற தொண்டர்களும் பேரணியாக சென்றனர்.

இதையடுத்து, வயநாடு தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களின் தேர்தல் தொகுதி பொறுப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இதனை அறிவித்துள்ளது. கே.வி.தங்கபாலு அவர்கள் தேர்தல் முடியும் வரை வயநாட்டடிலேயே தங்கி பொறுப்பாளராக பணியாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

.