This Article is From Apr 02, 2019

''70 ஆண்டுகளில் செய்யாத வேலையை 5 ஆண்டுகளில் காங்கிரஸ் எப்படி செய்யும்?'' - மோடி கேள்வி

பீகார் மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

பீகாரில் நிதிஷ் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது.

Patna:

70 ஆண்டுகளில் செய்யாத வேலையை காங்கிரஸ் கட்சி எப்படி 5 ஆண்டுகளில் செய்யும் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். 

பீகாரில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 17 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி 17 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எதிர் அணியில் காங்கிரசும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ஜமூவில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது- 

நான் வாக்குறுதி அளித்த அனைத்தையும் நிறைவேற்றி விட்டேன் என்று கூறவில்லை. நிறைவேற்ற வேண்யடிய பணிகள் இருக்கின்றன. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் முடிக்காத பணியை அவர்கள் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில் முடித்து விடுவார்களா?

தீவிரவாதம், விலைவாசி, வன்முறை, ஊழல், கருப்பு பணம் உள்ளிட்டவை காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தபோது கடுமையாக உயர்ந்தன. நாட்டின் வளம், நம்பகத்தன்மை, அமைதி, ராணுவத்தின் மரியாதை உள்ளிட்டவையும் காங்கிரஸ் ஆட்சியில் சீர் குலைந்தன. 

அம்பேத்கரை அனைத்து விதங்களிலும் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. மக்கள் மனதில் அம்பேத்கரின் பெயரை நீக்க காங்கிரஸ் நடவவடிக்கை எடுத்தது. 

இவ்வாறு மோடி பேசினார். இதற்கு எதிர்க்கட்சியான லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், '' ஒரு பிரதமரும், முதுல்வரும் இப்படியா பேசுவார்கள்?. வேலை வாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை, தொழிலாளர் விவகாரம், வளர்ச்சி குறித்து மோடி எதுவுமே பேசவில்லை. அவர்கள் பேசியது எல்லாம் அர்த்தமற்றவை. பீகாருக்கான திட்டங்கள் குறித்து மோடி பேசுவார் என எதிர்பார்க்கிறேன்'' என்றார். 

.