இந்துக்களை அவமதித்து விட்டதால் காங்கிரஸ் கட்சி பயத்தில் இருப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியுடன், கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுகிறார். இதனை விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் வர்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது-
இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில் போட்டியிடுவதை காங்கிரஸ் கட்சி தவிர்த்து வருகிறது. ஏனென்றால் இந்துக்களை 'இந்து தீவிரவாதம்' என்று கூறி அவர்களை காங்கிரஸ் கட்சி புண்படுத்தி விட்டது.
இதனால்தான் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியையும் 2-வது போட்டியிடும் இடமாக தேர்வு செய்திருக்கிறார்.
தங்களை இழிவு செய்த காங்கிரஸ் கட்சிக்கு இந்துக்கள் இந்த தேர்தலில் தக்க தண்டனையை கொடுப்பார்கள். அன்பான, அமைதியை விரும்பக் கூடிய இந்துக்களை தீவிரவாதிகள் என்று காங்கிரஸ் அழைத்திருக்கிறது. இதனை எப்படி இந்துக்கள் மன்னிப்பார்கள்?
புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ துணை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். அதற்கு நாம் பதிலடி கொடுத்தோம். இதையும் காங்கிரஸ் கட்சி அவமதித்தது. பாகிஸ்தானில் இருப்பவர்கள் எப்படி பேசுவார்களோ அதே தொனியில் காங்கிரஸ் பேசியது.
இவ்வாறு மோடி பேசினார்.