பிரதமர் மோடியை அமேதி தொகுதி சிறுவர்கள் திருடன் திருடன் என்று கத்த, அதைப் பார்த்து பிரியங்கா காந்தி வாயடைத்து நின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டலத்திற்கு காங்கிரஸ் பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். 40 மக்களவை தொகுதிகளுக்கு அவர் பொறுப்பாளராக இருக்கிறார். இந்த நிலையில் தனது அண்ணன் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
செல்லும் வழியில் பள்ளிச் சிறுவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பிரியங்காவை பார்த்து உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். பின்னர், காவலாளி ஒரு திருடன் என பொருள்படும் ‘சோக்கிதார் சோர் ஹே' என கத்தத் தொடங்கினர்.
சமீபத்தில் பிரதமர் மோடி காவல்காரன் என பொருள்படும் சோக்கிதார் பிரசாரத்தை தொடங்கினார். பாஜக தலைவர்கள் பலர் சமூக வலை தளங்களில் தங்களது பெயர்களுக்கு முன்பாக சோக்கிதார் என்பதை சேர்த்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் சோக்கிதார் என்றாலே அது மோடியை குறிக்கும் வாசகமாக மாறிவிட்டது. இந்த நிலையில், சிறுவர்கள் மோடியை திருடன் திருடன் என கத்தியதைப் பார்த்து பிரியங்கா காந்தி வாயடைத்து நின்றார்.
பின்னர் சிறுவர்களிடம், ‘நீங்கள் சொல்வது சரியானது அல்ல. நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும்' என்று அறிவுரை கூறினார். இதையடுத்து ராகுல் காந்தி வாழ்க என பொருள்படும், ராகுல் காந்தி ஜிந்தாபாத் என சிறுவர்கள் கோஷம் எழுப்ப தொடங்கினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபலங்கள் பலரும் இதனை ஷேர் செய்து விமர்சனம் எழுதத் தொடங்கியுள்ளனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த வீடியோவை ஷேர் செய்து, விளம்பரத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில், பிரியங்கா காந்திக்கு பாராட்டும் கிடைத்து வருகிறது. ஆம் ஆத்மி பிரபலம் ஆல்கா லம்பா தனது பதிவில், சிறுவர்களிடம் பிரியங்கா நடந்த விதத்தை மிகவும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.