டெல்லியில் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதற்கு இறுதிக்கட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. இதனை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்ஷித்துடன் (Shiela Dikshit) சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினர் காங்கிரஸ் கட்சியினர் அவர்களது தலைவர்களின் உத்தரவுப்படி நடப்பார்கள் என்று தெரிவித்தனர்.
முன்னதாக ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசிய சரத் பவார் பின்னர் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் சஞ்சய் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதம் சரத் பவார் நடத்திய மாநாட்டில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தற்போது மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியும், திரிணாமூல் காங்கிரசும் தனித்து போட்டியிடுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து களம் காண்கின்றது.
டெல்லியில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்தவர் ஷீலா தீக்ஷித் (Shiela Dikshit). அவரது ஆட்சியை ஆம் ஆத்மி கட்சிதான் முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த ஷீலாதான் தற்போது டெல்லி காங்கிரசின் தலைவராக உள்ளார். ஆம் ஆத்மியுடனான கூட்டணிக்கு ஷீலாதான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
டெல்லியில் சரத் பவார் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இங்கு மே 12-ம்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குகள் மே 23-ம்தேதி எண்ணப்படுகின்றன.
மேலும் படிக்க: கருத்துக் கணிப்பால் அதிர்ச்சி!! டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பாரா ராகுல்?