குஜராத்தில் பட்டேல் சமூகத்தின் இளம் தலைவர் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் மக்களவை தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். இதுதொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு ஹர்திக் அளித்த பேட்டியில், '' காங்கிரஸ் கட்சியில் வரும் 12-ம்தேதி சேர்வேன். ஜாம் நகர் தொகுதியில் போட்டியிடுவேன்'' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் சேர்மன் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் குஜராத்திற்கு வரவுள்ளனர். அவர்கள் முன்னிலையில் ஹர்திக் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாம் நகர் தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருப்பவர் பூனாபென் மாதம். இவர் பாஜகவை சேர்ந்தவர். கடந்த 2015-ல் இட ஒதுக்கீடு கோரி பட்டேல் சமூகத்தினர் போராட்டத்தில் குதித்தனர். அப்போது போராட்டத்தை வழி நடத்திச் சென்றவர்தான் இந்த ஹர்திக்.
கடந்த 2017 சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியை ஹர்திக் ஆதரித்தார். இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் காங்கிரஸ் 81 தொகுதிகளை கைப்பற்றியது. 2014 மக்களவை தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.