This Article is From Mar 04, 2019

மக்களவை தேர்தல் கூட்டணி : விஜயகாந்துடன் - ஓ.பி.எஸ்., ஜெயக்குமார் சந்திப்பு

அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. அவருடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மக்களவை தேர்தல் கூட்டணி : விஜயகாந்துடன்  - ஓ.பி.எஸ்., ஜெயக்குமார் சந்திப்பு

இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

ஹைலைட்ஸ்

  • தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக ஆர்வம் காட்டி வருகிறது
  • 7 தொதிகளை தேமுதிக கேட்பதாக தகவல்
  • 6-ம்தேதிக்குள் அனைத்தும் முடிந்து விடும் என்கிறார் ஓ.பி.எஸ்.

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன், ஓ.பி.எஸ். மற்றும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிகவை இழுப்பதில் திமுகவும், அதிமுகவும் அக்கறை காட்டி வருகிறது. இருப்பினும், அதிமுக தரப்பில் இருந்துதான் அதிகமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. 

இருப்பினும், விஜய காந்த் தரப்பில் பிடி கொடுக்காமல் 7 தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை அதிமுக அளிப்பதில் தயக்கம் காட்டி வருவதால் இழுபறி நீடிக்கிறது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த  அதிமுக அமைச்சர்கள், தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என்று தெரிவித்தனர். 

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விஜயகாந்தை நேரில் சென்று இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. 

இந்த சந்திப்புக்கு பின்னர் ஓ. பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்தோம். எங்களிடம் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் பேசினார்.  ஏற்கனவே தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்றோ அல்லது நாளையோ உடன்பாடு ஏற்பட்டு விடும். 

6-ம்தேதிக்குள் கூட்டணிபற்றி அனைத்துக் கட்சிகளின் முடிவுகளும் நல்ல முறையில் முடிவு செய்யப்படும். அன்றைய தினம் மோடி பங்கேற்கும்  மாநாட்டில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள்.  இவ்வாறு அவர் கூறினார். 
 

.