பழைய நண்பர்களையும் வரவேற்க பாஜக தயாராக இருக்கிறது என்று தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாய் முறையை பின்பற்றுவோம் என்று மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் உரையாடி வருகிறார்.
இன்று தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது நிர்வாகிகள் கூட்டணி தொடர்பான கேள்விகளை பிரதமர் மோடியிடம் கேட்டனர்.
இதற்கு மோடி அளித்த பதிலில், ''தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. கூட்டணியை பொறுத்தவரை வாஜ்பாய் காட்டிய வழியை பாஜக பின்பற்றும். கூட்டணி அமைப்பது குறித்து திறந்த மனதுடன் இருக்கிறோம். மக்களுடன் அமைக்கப்படும் கூட்டணியே வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்.