This Article is From Apr 05, 2019

திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும்: கருத்துக்கணிப்பில் தகவல்!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளை கைப்பற்றும் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும்: கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த தேர்தலில் மக்களின் மனநிலையை அறியும் பொருட்டு, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, ஒட்டுமொத்தமாக 21,464 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு,

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளிலும், அமமுக 1 முதல் 2 தொகுதிகள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில், திமுகவுக்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக 2 முதல் 3 தொகுதிகளிலும், அமமுக 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, நடுத்தர, ஏழை வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் பெறும் மனநிலை 7 முதல் 10% அதிகரித்துள்ளதாகவும், வாக்குக்கு பணம் பெறுவது தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

மேலும், அந்த ஆய்வில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று 33% பேரும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் வர வேண்டும் என்று 22% பேரும், டிடிவி தினகரன் வர வேண்டும் என்று 20% பேரும், கமல்ஹாசன் வர வேண்டும் என்று 7% பேரும் தெரிவித்துள்ளனர்.

.