ஸ்டாலின் தரக்குறைவாக பேசி வருவதாக முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
அதிமுக கூட்டணியை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் அரண்டு, மிரண்டு பயந்து போயுள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார்.
கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் பகுதியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-
நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு நல்ல பிரதமரை நாம் தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்தல் என்பது பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடிதான் சரியான தலைவர். எனவே, எங்களது கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
பலம் வாய்ந்த கட்சிகளை சேர்த்து அதிமுக மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியை பார்த்து ஸ்டாலின் அரண்டு, மிரண்டு, பயந்து போயிருக்கிறார். அவர் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகிறார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அதுதொடர்பான வழக்குகளை திமுக அதிகாரத்தை பயன்படுத்தி முடித்து விட்டது. என்னைப் பார்த்து ஸ்டாலின் மண்புழு என்கிறார், கேடி என்கிறார். இதுபோன்ற பேச்சு ஒரு தலைவருக்கு அழகல்ல.
தலைவர் என்பவர் தனது தகுதிக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். கீழ்த்தரமாக நடந்தால் அவருக்கு மரியாதை இருக்காது. முதலில் ஸ்டாலின் ஒரு தலைவரே அல்ல; அது வேறு விஷயம்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)