அதிகாரத்தில் இல்லாத திமுக பொய் வாக்குறுதிகளை அளித்திருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நாடு பாதுகாப்பாக இருக்க பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் முதல்வர் பேசினார்.
மக்களவை தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மற்றும் விருதுநகர் பகுதியில் அதிமுக வேட்பாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது-
நாடு பாதுகாக்க இருக்க வேண்டும் என்றால் அதற்கு வலிமையான பிரதமர் அவசியம். அந்த தகுதியும் திறமையும் மோடிக்கு மட்டுமே உள்ளது. எனவே அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும்.
பட்டாசு தொழிலை பாதுகாப்பதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சட்ட ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விருதுநகர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலை தொடர்ந்து இயங்க தேவையான அனைத்து முயற்சிகளும் செய்யப்படும்.
ஆட்சி அதிகாரத்தில் திமுக இல்லை. பிறகு எப்படி தனது வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்ற முடியும்? எனவே பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்திருக்கிறார். நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை திமுக அளித்திருக்கிறது.