தேர்தல் விதி மீறல் தொடர்பாக தற்போது வரையில் 4 ஆயிரத்து 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஒன்றரை லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தலையொட்டி 67, 729 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தலும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வரும் 18-ம்தேதி நடைபெறவுள்ளது. மேலும் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 21-ம்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதையொட்டி தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு, வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கணக்கில் வராத, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் தொகை பறிமுதல் செய்யப்படுகிறது.
உச்ச கட்டமாக நேற்றிரவு தமிழக காவல் துறையின் புதிய தலைவராக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டார். டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக இருந்து வரும் நிலையில் சுக்லாவின் நியமனம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மொத்தம் 1,50,302 வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் விதி மீறல் தொடர்பாக தற்போது வரையில் 4 ஆயிரத்து 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 127.66 கோடி பணமும், 98 கிலோ தங்கமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. வாக்காளர்களை பொறுத்தவரையில் தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிக்க வருவோர் வாக்காளர் அட்டை, ஆதார் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து விட்டு தங்களது வாக்கை பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.