திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மோடியை தோற்கடிக்காவிட்டால் இந்தியாவை எவராலும் காப்பாற்ற முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமா வளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் பேசிய அவர், ''இந்த தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்காவிட்டால் இந்தியாவை எவராலும் காப்பாற்ற முடியாது. பிரதமர் மோடியை அப்புறப்படுத்த திமுகவை வலுப்படுத்த வேண்டும். எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் மக்கள் பணி தொடர்ந்து செய்வேன்'' என்றார்.
நேற்று பிரசாரத்தின்போது பேசிய திருமாவளவன், ''மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை அழித்து ஒழித்து விடுவார். அம்பேத்கர் எழுதிய சட்டம் இந்தியாவை ஆளக் கூடாது என்பதுதான் மோடியின் நோக்கம்.
இரட்டை இலைக்கு வாக்களித்தால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வர நேரிடும். ஜெயலலிதாகூட இப்போது இல்லை. அக்கட்சிக்கு வாக்களித்தால் வாக்குகள் சிதறி நிலைமை என்னவாகும் என்பதை யோசித்து பாருங்கள். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றத்துடிக்கும் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது'' என்று கூறியிருந்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)