தமிழகம் முழுவதும் 991 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டு கணக்கில் வராத பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகிறது.
உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்படும் பொருட்களை, சம்பந்தப்பட்டவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் இதுவரையில் 991 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 280 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 661 கிலோ அளவிலான வெள்ளி பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 18-ம்தேதி 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
அன்றைய தினம் வாக்களிப்பவர்களுக்கு ஆட்காட்டி விரலில் மை வைக்கப்படும். மே 19-ம்தேதி மீதம் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் நடு விரலில் மை வைக்கப்படும். இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.