சிவகங்கை தொகுதியில் எச். ராஜா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
7 முறை தேர்தலில் வெற்றி பெற்ற ப.சிதம்பரம் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று பாஜக வேட்பாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக போட்டியிடுகிறது. இங்கு பாஜக வேட்பாளராக அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பாக கார்த்தி சிதம்பரம் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
சிவகங்கை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது எச்.ராஜா பேசியதாவது-
நமது தொகுதியின் முக்கிய பிரச்னை குடிநீர் பிரச்னைதான். இங்கு சிவகங்கை மாவட்டத்தில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறோம்.
இந்த தொகுதியில் 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக, நிதியமைச்சராக பதவி வகித்திருந்தார். அவர் இந்த தொகுதிக்கு என்ன செய்தார். அவர் நினைத்திருந்தால் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கலாம்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.