காதலால் ஏற்பட்ட பிரச்னையால் 12-ம் வகுப்பு மாணவனை வீட்டிற்கு அழைத்த காதலியின் உறவினர்கள் அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் நடந்துள்ளது.
ரிபன் சர்கார் என்ற மாணவன் 12-ம் வகுப்பை தனது மாமாவின் வீட்டில் தங்கி படித்து வருகிறான். அவனது பெற்றோர் வங்க தேசத்தில் உள்ளனர். இந்த நிலையில், தனது பள்ளித் தோழிக்கும் ரிபனுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனை தோழியின் வீட்டார் கண்டித்துள்ளனர்.
இந்த பிரச்னையை நேரில் பேசி தீர்ப்பதற்காக ரிபனை தோழியின் வீட்டார் அழைத்துள்ளனர். இதனை ஏற்று ரிபனும், தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளான். ஒரு கட்டத்தில் பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து ரிபனை, தோழியின் உறவினர்கள் அடித்து உதைக்கத் தொடங்கினர். ஊர்மக்களும் சேர்ந்து பின்னியெடுத்ததில், ரிபனுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரிபனின் மாமா பிரபுல்லா, தனது மருமகனை காப்பாற்ற முயன்றார். இருப்பினும், அங்கிருந்த கூட்டத்தை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
படுகாயமுற்ற ரிபன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.