மத்திய பிரேதச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர் கமல்நாத் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் கமல்நாத் ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக முக்கிய காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியில் இணைக்க முயன்று வந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்தது. இதில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மூன்றாவது முறையாக பாஜகவின் சிவராஜ் சவுகான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கமல்நாத் இன்று பிற்பகல் 12 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே அவர் ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது.
19 வருடங்களாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் பாஜக ஆளும் கர்நாடகத்திற்குத் தனி விமானம் மூலம் சென்றனர். தொடர்ந்து, அவர்கள் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதமும் அளித்தனர்.
இதையடுத்து, சபாநாயகர் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். மீதமுள்ள 16 சட்டமன்ற உறுப்பினர்களையும் தன்னை நேரில் சந்தித்து ராஜினாமாவை உறுதிப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார்.
காங்கிரஸ் தரப்பில் தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் கடத்தப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மூத்த தலைவர் திக்விஜய சிங்கும், சட்டமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர்களது ஆனால் அவரை யாரும் தொடர்பு கொள்ள முடியாது நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
எனினும், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் வீடியோ வடிவில் பதில் தெரிவித்து வந்தனர்.