சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் ரூ. 350 கோடி மோசடி செய்ததாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர் ரதுல் புரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசர் பேர் நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகளில் கடன் வாங்கியுள்ளது. ஆனால் கடனைத் திருப்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் ரதுல்புரி உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக ரதுல் புரி தந்தையும் மோசர் பேர் நிறுவனத்தில் முன்னாள் இயக்குநருமான தீபக் புரில் மற்றொரு இயக்குநர் நீதா புரி (ரதுல் புரியின் தாயார்) மற்றும் சஞ்சய் ஜெயின், வினித் சர்மா ஆகிய 5 பேருக்கு எதிராகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் 354 கோடி ரூபாய் அளவிலான வங்கி கடன் மோசடி வழக்கில் ரதுல் புரி அமலாக்கத் துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசர் பேர் நிறுவனம் சிடி, டிவிடிகள் மற்றும் டேடா சேமிப்பு சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது. நிறுவனம் கடந்த ஆண்டு மூடப்பட்டது.
கைதான ரதுல் புரி மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் தங்கை மகனாவர். மோசர் பேர் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து கடந்த 2012இல் விலகி விட்டார். மேலும் அந்த நிறுவனம் தற்போது செயல்பாட்டிலும் இல்லை. ஏற்கனவே அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் ரதுல் புரி மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ரதுல் புரியின் ஜாமின் மனு ஆகஸ்ட் 6 அன்று நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அவருக்கு எதிராக ஜாமின் வழங்காத வாரண்டையும் வெளியிட்டது.