தான் ஒரு சிவபக்தன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
New Delhi: இந்து மதம் குறித்த என்னுடைய புரிதல்கள் பாஜகவினரின் புரிதலை விட மேலானதாக இருக்கும். பாஜகவினர் ஒருபோதும் இந்து மதத்தை புரிந்துகொள்ள மாட்டார்கள். சில நாட்களுக்கு முன்னர் கோயிலுக்கு சென்ற ராகுல் குறித்து சர்ச்சை கருத்தை பாஜக தெரிவித்தது.
மத்திய பிரதேசத்தில் இன்று பேசிய ராகுல், மிக முக்கியமாக ஒருவர் கொண்டிருக்க வேண்டியது தன்னடக்கமே. அதாவது, ஒருவர் பேசுகிறார் என்றால், அவர் கூறுவதை நான் புரிந்துகொள்வேன். ஒருவர் கோபமாக இருக்கிறார் என்றால், அவரை நான் முட்டாள் என்று அழைக்க மாட்டேன். அவரின் கோபம் என்ன என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்வேன். பாஜகவினர் ஒரு போதும் இந்து மதத்தை புரிந்துகொள்ள மாட்டார்கள். பாஜகவினரின் புரிதலை விட இந்த மதத்தை அதிகமாக நான் புரிந்து வைத்துள்ளேன்.
கடந்த ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை திடீரென கட்டியனைத்தார். அப்போது பேசிய ராகுல், பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர், காங்கிரஸிடம் இருப்பது என்ன என்பதை எனக்கு புரிய உதவிசெய்துள்ளனர் என கூறினார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸகர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையில் மதம் சார்ந்த வாக்குவாதங்கள் அதிகரித்து வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் மகாகலேஷ்வர் கோயிலுக்கு சில நாட்களுக்கு முன்னர் சென்ற ராகுல், சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து பாஜக செய்தி தொடர்பாளர் பத்ரா, ‘ராகுல் காந்தி பூணூல் போட்டிருக்கிறார். அவர் உஜ்ஜயின் கோயிலுக்கு செல்கிறார் . நாங்கள் அவரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம். எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள்?' என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.