பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்தி வரவேற்றுள்ளார். இதேபோன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சிந்தியாவை வரவேற்றுள்ளார்.
அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், 'ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து பேசினேன். மத்திய பிரதேச மக்களின் பிரச்னைகளை தீர்த்து அவர்களுக்கு பாஜக சேவை செய்கிறது. இப்போது சிந்தியா கட்சியில் இணைந்திருப்பதன் மூலம் பணிகள் இன்னும் வலுவடையும்' என்று தெரிவித்துள்ளார்.
சிந்தியாவை சந்தித்த புகைப்படத்தை அமித் ஷா வெளியிட அது 48 ஆயிரம் லைக்குகளுக்கு மேல் ட்விட்டரில் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் சிந்தியா. ராகுல், சோனியா, பிரியங்காவுக்கு நெருக்கமானவரான அவர், நேற்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இந்தநிலையில் இன்று காலை அவர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், 'சிந்தியாவை பாஜகவுக்கு வரவேற்கிறேன். அவரது வருகை கட்சியை இன்னும் வலுப்படுத்தும். அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை பாஜக வழங்கவுள்ளது. இதற்காக அவர் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார். போபாலில் அவர் பேரணி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் சிந்தியாவுக்கு ஆதரவாகவும், ஆளும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் 20 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்கள் ராஜினாமா கடிதம் அளித்திருப்பதால், ஆட்சி கவிழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
சிந்தியா பாஜகவில் சேர்ந்தது தொடர்பாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருந்தது. அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'சிந்தியாவை வரவேற்று பிரதமர் மோடியோ, அமித் ஷாவோ ட்விட்டரில் கூட பதிவிடவில்லை. சற்று தாமதம் ஆனால் பரவாயில்லை. 24 மணி நேரம் கடந்தபின்னரும் எந்தவொரு வரவேற்பு ட்விட்டும் இல்லை. இருவரும் சிந்தியாவை அவமானப்படுத்தி விட்டனர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமித் ஷா ட்விட் செய்திருக்கிறார்.