மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது, ஆட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் கம்நாத் இன்று ஆளுநர் லால்ஜி தாண்டனை நேரில் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி ராஜினாமா செய்துள்ளனர். சிந்தியா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகர் பிரஜாபதியை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கக் கொடுக்கப்பட்ட கெடு நெருங்கும் நிலையில், ஆளுநர் லால்ஜி தாண்டனை முதல்வர் கல்நாத் இன்று நேரில் சந்தித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கமல்நாத் கூறும்போது, பாஜகவின் குதிரை பேர நடவடிக்கை குறித்து ஆளுநருக்கு அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். மேலும், பாஜகவின் ஒழுக்கக்கேடான, நெறிமுறையற்ற சட்டவிரோத செயல்களைச் சுட்டிக்காட்ட விடாமல் நான் தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கடந்த வாரம் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையில், குர்கான் ஹோட்டலில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இரவு நேரத்தில் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் குறித்தும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொறுப்புள்ள தலைவராக, மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் வரும் 16ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளேன். ஜனநாயகத்தைக் காக்கும் வகையில், மத்தியப் பிரதேச மக்கள் அமைதி காப்பார்கள் என்று உறுதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கமல்நாத் ஆளுநருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், பெங்களூரில் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை விடுவிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மொத்தம் 228 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், காங்கிரஸுக்கு 116 எம்எல்ஏக்கள் பலம் இருந்தது. இதில், 22 எம்எல்ஏக்களின் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சட்டப்பேரவையின் பலம் 206ஆக குறைந்துவிடும். அப்போது, பெரும்பான்மைக்கு 104 எம்எல்ஏக்கள் தேவையென்ற நிலையில், காங்கிரஸ் வசம் 94 எம்எல்ஏக்களே உள்ளனர். அதேசமயம் 107 எம்எல்ஏக்கள் உள்ளதால் பாஜகவுக்கே பெரும்பான்மை உள்ளது.