மத்திய பிரதேசத்தில் 6 வயது இரட்டைச் சகோதரர்களை பணத்துக்காக கடத்தி ஒரு கும்பல் கொலை செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சித்திரகூட்டில் கடந்த 12-ம்தேதி கடத்தப்பட்ட குழந்தைகள் உத்தரப்பிரதேச மாநிலம் பந்தா ஆற்றில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சித்திரகூட்டை சேர்ந்த தொழிலதிபரின் இரட்டை குழந்தைகள் பள்ளியில் படித்து வந்தனர். ஆண் குழந்தைகளான அவர்களை கடந்த 12-ம்தேதி முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, ஸ்கூல் பஸ்ஸிலிருந்து பட்டப்பகலில் கடத்திச் சென்றது. இந்த கடத்தல் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்ததால், அவை வைரலாகி மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து குழந்தைகள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர். இரட்டை சகோதரர்களை தேடும் வேட்டையில் உத்தர பிரதேச போலீசும் ஈடுபட்டிருந்தது.
குழந்தையை கடத்திய இருவரில் ஒருவர் எஞ்ஜினியரிங் மாணவர் என்றும், மற்றொருவர் பஜ்ரங் தளத்தின் உள்ளூர் தலைவர் என்றும் போலீசார் கண்டுபிடித்தனர். குழந்தையை கடத்திய கும்பல், அவரது தந்தையான தொழில் அதிபரிடம் பணம் கேட்டுமிரட்டியுள்ளது.
அவர்கள் கேட்ட பணத்தை தொழில் அதிபரான தந்தையும் அளித்துள்ளார். இருப்பினும், இரு குழந்தைகளை கொன்ற கும்பல், அவர்களை உத்தரப்பிரதேச மாநிலம் பந்தா ஆற்றில் வீசியுள்ளது. அவர்கள் இருவரும் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரட்டை குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)