இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பால் தாக்கரேவின் பேரன் ஆதித்யா தாக்கரே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை சிவசேனா கட்சி முதல்வர் வேட்பாளராக களமிறக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சாத்தியமானால் தாக்கரே குடும்பத்தில் தேர்தலில் போட்டியிடும் முதல் நபராக ஆதித்யா தாக்கரே இருப்பார். குறிப்பாக ஓர்லி சட்டமன்ற தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம்தான், ஓர்லி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சச்சின் ஆகிர் சிவசேனா கட்சியில் சேர்ந்தார். தற்போது ஆதித்யாவுக்கு 25 வயதுதான் ஆகிறது. ஆதித்யா போட்டியிடுவார் என வெளியாகியிருக்கும் தகவல் சிவசேனா தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் சிவசேனா தரப்பில் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை. இருப்பினும் இதனை மறுத்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த 2014-ல் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் பாஜக, சிவசேனா கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 122 மற்றும் சிவசேனா 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பின்னர் பாஜகவை சிவசேனா ஆதரித்தது.