This Article is From Nov 26, 2019

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Maharashtra: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் - உச்ச நீதிமன்றம்

Mumbai:

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக உள்ள எம்எல்ஏவை சபாநாயகராக தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது. 

இந்த வழக்கு விசாரணையில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாகவும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் அடிப்படையிலே ஆளுநர் பகத்சிவ் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது. 

முன்னதாக, இந்த ஆதரவு கடிதத்தை நீதிபதிகள் தாக்கல் செய்ய கூறியதை தொடர்ந்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

 

.