This Article is From Nov 27, 2019

மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் பதவியேற்பு: அஜித் பவாருக்கு கட்டித்தழுவி வரவேற்பு!!

Maharashtra: எம்எல்ஏக்கள் பதவியேற்பை நடத்தி வைப்பதற்காக பாஜக எம்எல்ஏ காளிதாஸ் கொலம்காரை இடைக்கால சபாநாயகராக கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நியமித்துள்ளார்.

Maharastra: மகாராஷ்டிராவில் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ. காளிதாஸ் கொலம்கார் ஆளுநர் நியமித்தார்.

Mumbai:

மகாராஷ்டிரா சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவியேற்புக்காக அவைக்கு வருகை தந்த எம்எல்ஏக்களை தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை சுப்ரியா சுலே வரவேற்ற போது, வருகை தந்த அஜித்பவாரை அவர் கட்டித்தழுவி அன்புடன் வரவேற்றார். 

அஜித்பவார் மீண்டும் கட்சிக்கு திரும்பியது, தேவேந்திர ஃபட்னாவிஸின் ஆட்சியை சுமார் 80 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டுவர உதவியது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது முதல்வர் பதவியையும், அஜித்பவார் தனது துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தனர். 

இதையடுத்து, மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து, நாளைய தினம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்கிறார். 

முன்னதாக, நேற்றைய தினம் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக உள்ள எம்எல்ஏவை சபாநாயகராக தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மும்பை சிவாஜி பூங்காவில் நாளை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார். 

பெரும்பான்மையை நிரூபிக்ககோரி தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஃபட்னாவிஸ். இதேபோல், பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மைக்கு தங்களது எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று தருவேன் என்று உறுதியளித்த அஜித்பவாராலும், அதனை மேற்கொள்ள முடியவில்லை. 

இதனிடையே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நான் முதல்வராவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

முன்னதாக, மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், திடீரென ஆட்சி அமைப்பது, ஜனநாயக விரோதமானது என்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்திருந்தன. 

இந்த வழக்கு விசாரணையில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாகவும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையிலே ஆளுநர் பகத்சிவ் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது. 

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க காலதாமதம் ஆனால், குதிரை பேரத்திற்கு வாய்ப்பு உள்ளதால் ஜனநாயகத்தை காக்கும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. இதுபோன்ற நேரத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதே சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

இதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக உள்ள எம்எல்ஏவை சபாநாயகராக தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

.