பாஜகவுக்கு ஆதரவு அளித்து விட்டு பின்னர் ராஜினாமா செய்த தேசியவாத காங்கிரசின் அஜித் பவாருக்கு, சிவசேனா அரசில் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் இன்று நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவின்போது முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பு ஏற்கவுள்ளார். துணை முதல்வர் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த பொறுப்பு மீண்டும் அஜித் பவாருக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 6 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்று அஜித் பவார் தெரிவித்திருக்கிறார்.
துணை முதல்வர் பதவி அளிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது சம்பந்தமாக முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் கட்சிதான் முடிவு செய்யும் என்றும் அஜித் பவார் பதில் அளித்திருக்கிறார்.
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக கடந்த சனிக்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன், பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார், தனது சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இதன்பின்னர் பதவியை ராஜினாமா செய்த முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பதவி விலகுவதாக கூறினார்.
இதன்பின்னர் அணி மாறிய அஜித் பவாருடன் சரத் பவார் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி, அஜித்தை சரத்பவார் பக்கம் திருப்பினர்.
இந்த நிலையில் இன்று மும்பை சிவாஜி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.