மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றதும், பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Mumbai: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடியின் இளைய சகோதரர் உத்தவ் தாக்கரேவுக்கு அவர் ஒத்துழைப்பு தர வேண்டும் என சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக நேற்று மாலை மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரேவும், அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர் விடாமுயற்சியுடன் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன் என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக திகழ்ந்தாலும், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், ஆட்சி அமைக்க சிவசேனாவின் துணை தேவைப்பட்டது. எனினும், 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற சிவசேனா வலியுறுத்தி வந்தது.
எனினும், தனிப்பெரும் கட்சியான நாங்கள் எதற்கு முதல்வர் பதவியை விட்டுத்தர வேண்டும் என பாஜவும் விடப்படியாக மறுத்தது. இதனால், பாஜவால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் துணையுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் பதவியை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னாவில்', அதன் தலையங்கம் பகுதியில், மகாராஷ்டிரா அரசியலில் பாஜக - சிவசேனா இடையே நெருக்கடி ஏற்பட்டாலும், நரேந்திர மோடி மற்றும் உத்தவ் தாக்கரே சகோதர உறவுகளையே கடைபிடித்து வருகிறார்கள்.
அதனால், மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடியின் இளைய சகோதரர் உத்தவ் தாக்கரேவுக்கு அவர் ஒத்துழைப்பு தர வேண்டியது அவரது கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் என்பவர் எந்த ஒரு தனிக்கட்சியையும் சார்ந்தவர் அல்ல, அவர் ஒட்டுமொத்த நாட்டிற்கும் உரியவர். ‘மகாராஷ்டிரா மக்களின் முடிவுக்கு டெல்லி ஆதரவு தர வேண்டும் என்றும், மாநில அரசின் ஸ்திரத்தன்மை குறைந்துபோகாமல் பார்த்துக் கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
மாநிலத்தின் வேகமான வளர்ச்சிக்கு மத்திய அரசு இணக்கமாக செல்ல வேண்டும். விவசாயிகளின் துயரை துடைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மும்பையில் நேற்று மாலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு தாக்கரே சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
(With inputs from PTI)