Read in English বাংলায় পড়ুন हिंदी में पढ़ें
This Article is From Nov 25, 2019

“Sharad Pawar-தான் என்னுடைய தலைவர்..!”- பதவியேற்புக்குப் பின்னர் வாய் திறந்த அஜித் பவார்!

#MahaPoliticalTwist - தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது.

Advertisement
இந்தியா
Mumbai/New Delhi:

#MahaPoliticalTwist - மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்த ஆட்சியமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில் ஃபட்னாவிஸ் - அஜித் பவார், மகாராஷ்டிர ஆளுநரிடம் சமர்பித்த ஆதரவுக் கடிதங்களை நாளை காலை, தங்களிடம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படிபட்ட பரபரப்பான அரசியல் சூழலில், அனைத்திற்கும் காரணமான அஜித் பவார், குழப்பும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

“நான் தேசியவாத காங்கிரஸில்தான் இருக்கிறேன். எப்போதும் தேசியவாத காங்கிரஸில்தான் இருப்பேன். சரத் பவார்தான் எனது தலைவர். பாஜக - என்சிபி கூட்டணி, மகாராஷ்டிராவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான அரசை வழங்கும். மகாராஷ்டிர மக்களின் நலனுக்காக இந்தக் கூட்டணி வேலை செய்யும்,” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் அஜித் பவார். 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ், 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா, ஆட்சியமைக்க இருந்த நிலையில், ‘ராஜதந்திரத்தால்' பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி மலர்ந்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது. அதை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்றுள்ளார். 

Advertisement

தற்போது அமைந்துள்ள மகாராஷ்டிர அரசுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான என்.வி.ரமணா, அஷோக் பூஷண் மற்றும் சஞ்சிவ் கண்ணா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம், நாளை காலை 10:30 மணிக்குள், எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, தன் பதவிக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில், பாஜக தரப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டார் என்று சிவசேனா - காங் - என்சிபி தரப்பு, நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தியது. 

அதற்கு பாஜக தரப்பு, ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஆதரவுக் கடிதங்களை சமர்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கோரியது. அதை மறுத்துவிட்டது நீதிமன்றம். 

Advertisement

“மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அனைத்து விஷயங்கள் குறித்தும் தெளிவு கிடைத்துவிடும். பாஜக தரப்பு அதில் தோல்வி பெறும். நாங்கள் வெற்றி பெறுவோம்,” என்று காங்கிரஸ் தரப்பு உறுதியாக சொல்கிறது. 

தற்போது யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதில்தான் ஆட்சி அதிகாரம் யார் கையில் நீடிக்கும் என்பது தெரியவரும். இரு தரப்பும் தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாக சொல்லி வருகின்றன. 

Advertisement