தான் திருப்பித் தருவதாக சொன்ன பணத்தை பெற்றுக் கொள்வதற்கு இந்திய வங்கிகளை பிரதமர் மோடி ஏன் அறிவுறுத்தவில்லை என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன்பெற்று விட்டு தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்தது.
இதுதொடர்பாக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக மல்லையாவை நாடு கடத்தும் ஆவணத்தில் இங்கிலாந்து அரசு கையெழுத்திட்டிருக்கிறது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார். இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, ஒருவர் 9 ஆயிரம் ரூபாயை சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார் என்று மல்லையாவின் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.
இது மல்லையாவை சூடேற்றி விட்டது. இந்த நிலையில் மோடியை விமர்சித்து மல்லையா ட்விட் தட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
நாடாளுமன்றத்தில் மோடி பேசிய பேச்சு எனது கவனத்திற்கு வந்தது. உண்மையிலேயே மோடி நன்றாக பேசுபவர். ஒருவர் 9 ஆயிரம் கோடியை சுருட்டிச் சென்று விட்டார் என மோடி பேசியிருக்கிறார்.
நான் கடன்பெற்ற பணத்தை திருப்பி அளிக்கிறேன் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். எனது பணத்தை அவர்கள் பெற்றிருக்கலாம். ஆனால் வங்கிகள் எனது பணத்தை பெற அனுமதிக்கப்படாதது ஏன்?
இவ்வாறு விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
.