This Article is From Sep 14, 2018

பெண்ணை சரமாரியாக தாக்கிய டெல்லி காவலரின் மகன்… கொதித்தெழுந்த உள்துறை அமைச்சர்!

இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்

பெண்ணை சரமாரியாக தாக்கிய டெல்லி காவலரின் மகன்… கொதித்தெழுந்த உள்துறை அமைச்சர்!

வீடியோவில் டெல்லி போலீஸ் அதிகாரியின் மகன், இளம் பெண்ணை சரமாரியாக தாக்குவது பதிவாகியுள்ளது

New Delhi:

டெல்லியில் இருக்கும் ஒரு அலுவலகத்திற்குள் ஒரு இளம் பெண்ணை, வாலிபர் ஒருவர் தாக்குவது வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியின் உத்தம் நகரில், செப்டம்பர் 2 ஆம் தேதி இந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ, ஒரு அலுவலகத்துக்குள் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளம் பெண்ணைத் தாக்குவது ரோகித் சிங் தோமர் என்பதும், அவர் டெல்லி போலீஸ் அதிகாரியின் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் தலைமறைவாக இருக்கிறார்.

இது குறித்து யாரும் வழக்குப் பதிவு செய்யாத நிலையில், ரோகித்தை மணமுடிக்க இருந்தப் பெண், போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது திருமணத்தையும் ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து வீடியோவில் ரோகித்திடம் அடி வாங்கும் பெண் போலீஸில், ‘ரோகித் தோமர், அவரது நண்பரின் அலுவலகத்துக்கு என்னை அழைத்தார். அப்போது என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். நான் இது குறித்து போலீஸிடம் கூறுவேன் என்று சொன்ன போது என்னை தாக்க ஆரம்பித்தார்’ என்று எழுத்துபூர்வமாக புகார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஒரு வாலிபர், இளம் பெண்ணை தாக்கும் வீடியோ குறித்த சம்பவம் என் கவனத்துக்கு வந்தது. இது குறித்து டெல்லி கமிஷனருக்கு போன் மூலம் பேசியுள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

.