தேனி மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகள் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர், நிர்வாண நிலையில் தப்பியோடியுள்ளார். செல்லும் வழியில் 80 வயது மூதாட்டி ஒருவரின் கழுத்தில் அவர் கடித்துள்ளார். இதில் மூதாட்டி உயிரிழக்க, தப்பியோடிய 35 வயது இளைஞர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மணிகண்டன் என்ற 35 வயது இளைஞர் இலங்கையில் இருந்து திரும்பி வந்துள்ளார். இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
அவருக்கு ஏற்கனவே உடல்நல பாதிப்புகள் இருந்தன. இதற்காக அவர் கடந்த 2010 முதல் சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு மன நல பாதிப்பும் இருந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டிலிருந்து நிர்வாண நிலையில் மணிகண்டன் தப்பியோடியுள்ளார். அவர் தனிமைப்படுத்துதலில் இருந்த வீட்டிலிருந்து, 100 மீட்டர் தொலைவில் 80 வயது மூதாட்டி வசித்து வந்தார். அவரது கழுத்தை மணிகண்டன் கடித்துக் குதறியுள்ளார்.
இதனால் காயமடைந்த பாட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உயிர் சிகிச்சை பலனின்றி பிரிந்தது.
இந்த நிலையில் தப்பியோடிய மணிகண்டன் மீது கொலைவழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மணிகண்டனுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.