குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு புகுந்த மர்ம நபர் ஒருவர் மாணவர்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
'உங்களுக்கான சுதந்திரத்தை வாங்கிக் கொள்ளுங்கள்' என பொருள்படும் 'யேஹ் லோ ஆசாதி' என்று கத்திக்கொண்டே அந்த நபர் மாணவர்களை நோக்கி சுட்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பல்கலைக் கழகம் அருகே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக் கழகத்திற்கு அருகேயுள்ள ஷாஹீன் பாக்கில் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஜாமியா மில்லியாவில் இருந்து மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்திருக்கும் ராஜ்காட்டிற்கு பேரணியாக செல்வதற்கு அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
ராஜ்காட்டிற்கு அமைதியான முறையில் பேரணி நடத்தி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்தோம் என்று போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.