புதுடில்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் ஏழு வயது சிறுமியை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளது.
பாஜக ஆட்சி நடத்தும் மத்திய பிரதேச மாநிலத்தில், வழக்கு விசாரனையை துரிதமாக நடத்த கோரி காங்கிரஸ் அழுத்தம் கொடுத்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை காண வந்த பாஜக எம்.பிக்கு நன்றி தெரிவிக்குமாறு கூறிய பாஜக எம்.எல்.ஏவை கண்டித்து அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
கடந்த செவ்வாய் கிழமை அன்று, பள்ளிக்கூட வாசலில் பெற்றோருக்காக காத்திருந்த இரண்டாம் வகுப்பி சிறுமியை இர்பான் மற்றும் ஆசிப் என்ற இரண்டு நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். சிறுமியை பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, கழுத்தில் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிக்கூடத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் மீட்கப்பட்ட சிறுமி, தீவிரமான சிகிச்சையில் உயிருக்கு போராடி வருகிறார்.
வழக்கு பதிவு செய்து விசாரித்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளின் உதவியால், கடந்த புதன்கிழமை இரவு முதல் குற்றவாளி இர்பானை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர், வெள்ளிகிழமை இரவு இரண்டாவது குற்றவாளியான அசிப்பை கைது செய்தனர்.
சிறுமிக்கு நடந்த கொடூர தாக்குதலை கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மந்தாசூர் பகுதியை சேர்ந்த மக்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனையை மக்களே தீர்மானிக்க போவதாக கோஷங்களை வெளிப்படுத்தினர்.
எனினும், சிறுமியின் வாக்குமூலம் பெற்றவுடன் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மந்தாசூர் உயர் காவல் அதிகாரி மனோஜ் சிங் செய்தியாளர்களிடன் தெரிவித்தார்.
வழக்கு விசாரணையை துரிதமாக நடத்த கோரியும், சிபிஐ விசாரிக்க கோரியும் காங்கிரஸ் தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடைப்பெற்ற இந்த வழக்கை “அரசியல் கருவியாக” பயன்படுத்தி காங்கிரஸார் பாஜகவிற்கு அழுத்தம் தர முயற்சிப்பதாக பாஜகவின் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.