போபால்: பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களுக்கு மரண தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி, மத்திய பிரதேச மாநிலம், மண்டோசோர் பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி, முகம், கழுத்து பகுதிகளில் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினர், சிசி டிவி காட்சிகளின் உதவியுடன் இர்ஃபான், அசிஃப் என்ற இளைஞர்களை கைது செய்தனர். தீவிரமான காயங்களுடன் மாணவி உயிர் தப்பிய இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், மத்திய பிரதேச மக்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருமாறு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே, இந்த வழக்கு விசாரணை சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது.