உடல்நலம் குன்றியுள்ள என்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் பார்க்க வந்து, அதை தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது வேதனை அளிப்பதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
கணைய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று முதல்வர் மனோகர் பாரிக்கரைச் சந்தித்து பேசினார்.
பின்னர் கேரளாவில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் புதிய ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பாரிக்கர் தன்னிடம் தெரிவித்தாக கூறினார். மேலும், இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி - அம்பானி இடையிலான ஒப்பந்தம் எனவும் ராகுல் கூறி இருந்தார்.
இதற்கு மனோகர் பாரிக்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்திக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில் கூறியுள்ளதாவது:
வேறுபட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து கொள்வது நாகரிக அரசியலை வளர்க்கவே. அதன் அடிப்படையிலேயே நீங்கள் என்னை சந்திக்க வந்ததாக எண்ணினேன். உங்களுடைய பணிவான தன்மையை பாராட்டினேன்.
எதுஎப்படி இருந்தாலும், நீங்கள் என்னைச் சந்தித்தது தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்திகள் எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய ஊடகங்களில், ரஃபேல் ஒப்பந்தத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று என்னை மேற்கோள்காட்டி நீங்கள் குறிப்பிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
5 நிமிடம் நடந்த சந்திப்பில், ரபேல் குறித்து நீங்கள் எதையும் குறிப்பிடவில்லை. அது குறித்து விவாதிக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக, வாழ்த்து தெரிவிக்கவே நீங்கள் என்னை சந்திப்பதாக நினைத்தேன். வேறு உள்நோக்கம் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது. உங்கள் பயணத்தில் பெரிய ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த கடிதத்தை எழுதி உள்ளேன். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து அதனை தரக்குறைவான அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த வேண்டாம். உங்களின் இந்த செயல் என்னை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.