ஹைலைட்ஸ்
- இது குறித்த தகவலை புனே போரலீஸ் தெரிவித்துள்ளது
- எதிர் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளது
- இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Mumbai: பிரதமர் மோடியை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக புனே நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாவோயிஸ்ட் என்று சந்தேகிக்கப்படும் நபரிடமிருந்து கிடைத்த கடிதத்தில் இந்தத் தகவல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புனேவில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், தலித் செயற்பாட்டாளர் சுதிர் தவாலே, வழக்கறிஞர் சுரேந்திர கேட்லிங், செயற்பாட்டாளர் மகேஷ் ராவத், சோமா சென் மற்றும் ரோனா வில்சன் ஆகியோர் அடங்குவர். ஜனவரி மாதத்தில் நடந்த பீமா-கொரிகன் கலவரத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. டெல்லியை வசிப்பிடமாகக் கொண்ட ரோனா வில்சனிடம் இருந்து தான், மோடியை கொலை செய்வதற்கான சதித் திட்ட கடிதம் கிடைத்துள்ளதாக போலீஸ் புனே செஷன்ஸ் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
அந்த கடிதத்தில், `எம்-4 ரக ரைஃபல் தேவை குறித்தும், 8 கோடி ரூபாய் பணத் தேவை குறித்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராஜீவ் காந்திக்கு நடந்தது போல ஒரு சம்பவத்தைத் தான் இவர்களும் செய்ய நினைக்கிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் இந்த கடிதத்தின் நகலை வெளியிட்டது. அதில், `மேற்கு வங்கம் மற்றும் பிகார் மாநிலங்களில் மோடி தோல்வி கண்டிருந்தாலும், 15 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இது இப்படியே சென்றால் நம் கட்சி நபர்களுக்கும் கட்சிக்கும் நல்லதல்ல. இதற்கு ஒரு முடிவுகட்ட சில ஸ்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், `என் தரப்பினர் மீது உள் நோக்கம் கொண்ட வகையில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அரசு தரப்பில் சமர்பித்த கடிதம் போலியானது' என்று கூறியுள்ளார்.